'சங் பரிவார'த்தின் பாசிச கருத்தை வலுப்படுத்துகிறது இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற கருத்து
டெல்லி: மருத்துவ உயர்படிப்புகளில் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது "இந்துத்துவாவின் குரல்"தான் என்று சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உயர்கல்வி துறையில் ஜாதி, மதம், இருப்பிடம் என்கிற அடிப்படைகளிலான இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் கல்வி வாரியத்தின் தலைவர் ஃபாசல் கஃபூர் கூறியுள்ளதாவது:

இடஒதுக்கீடு வழங்கப்பட்டு 68 ஆண்டுகளாகிறது என்கிறது உச்சநீதிமன்றம். இது முற்றிலும் தவறானது. இந்த கருத்தை தெரிவித்திருக்கும் நீதிபதிகள் வரலாற்றை படிக்க வேண்டும்.
1980ஆம் ஆண்டுகளிலேயே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷன் விவாதங்கள் நடைபெற்றாலும் 1990ஆம் ஆண்டுகள் வரை அது நடைமுறைக்கு வரவில்லை.
1995ஆம் ஆண்டுதான் மாநிலங்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தொடங்கின. இது தேசிய அளவில் 2005ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் கமிஷன் 27% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் நடைமுறையில் மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோரின் சதவீதம் என்பது வெறும் 8% ஆகத்தான் இருக்கிறது.
இவ்வாறு ஃபாசல் கஃபூர் கூறியுள்ளார்.
இதேபோல் ஆதிவாசி கோத்ரா மகாசபாவின் தலைவர் கீதானந்தன் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தே அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அத்துடன் இடஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சிக்கும் சங் பரிவாரங்களின் பாசிச கருத்தை வலுப்படுத்துவதாகும்.
தற்போதைய சூழலில் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையே இல்லை. இன்னமும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை... அப்படியான நிலையில் ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications