ப்ளூவேலை தடை செய்ய சாப்ட்வேர் கண்டுபிடிங்க.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய மென்பொருள் உருவாக்கும் நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ப்ளூவேல் விளையாட்டு போன்ற உயிருக்கு ஆபத்தான விளையாட்டை தடை செய்ய நிபுணர் குழுவை அமைத்து சிறப்பு மென்பொருளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் விளையாடப்படும் ப்ளூவேல் விளையாட்டு இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் கொடூர விளையாட்டாக நாடு முழுவதும் பலரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. இந்த விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ப்ளூவேல் விளையாட்டு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ப்ளூவேல் விளையாட்டைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ப்ளூவேல் விளையாட்டை கட்டுப்படுத்தும் பயர்வால் என்ற தடுப்பரண் மென்பொருளை உருவாக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். அப்படி அந்த மென்பொருள் மூலம் ப்ளூவேல் விளையாடுவதை தடுக்கலாம் என்றால் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து அந்த மென்பொருளை உருவாக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ப்ளூவேல் விளையாட்டை கட்டுப்படுத்த கூகுள், முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகிய நிறுவனங்களிடம் ப்ளூவேல் விளையாட்டை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதே போன்று ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய வழி இருக்கிறதா என்று ஆராய மத்திய மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.