தமிழகம், கேரள கோவில்களில் யானைகள் வதையா?.. 6 வாரங்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
டெல்லி : தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோவில் யானைகள் வதைக்கப்படுவதாக மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பயன்படுத்தப்படும் யானைகள் குறித்த கணக்கெடுப்பை 6 வாரங்களுக்குள் முடிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட பொது நலன் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்பு தாக்கல் செய்த மனுவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகவில் உள்ள கோவில்களில் யானைகள் வதை செய்யப்படுவதாகவும், அதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
யானை பராமரிப்பு மற்றும் கோவில்களில் பயன்படுத்தும் யானைகள் குறித்து விளக்கத்தை தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு கேரளாவில் கோயில்களில் பயன்படுத்தப்படும் யானைகள குறித்த கணக்கெடுப்பை இதுவரை தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும் 6 வாரங்களுக்குள்ளாக அனைத்து மாநில அரசும் யானைகள் குறித்த கணக்கெடுப்பை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.