ஹாதியாவின் திருமணம் குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது... சுப்ரீம் கோர்ட்
ஹாதியாவின் திருமண முடிவு குறித்து கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஹாதியாவின் திருமண முடிவு குறித்து கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும் ஹாதியா ஷபின் ஜஹான் திருமணத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து விசாரிக்கும் அதிகாரம் என்ஐஏவுக்கு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அகிலா என்ற இளம்பெண்ணை, கட்டாயமாக மதம் மாற்றி, ஹாதியா என பெயர் மாற்றம் செய்து ஷபின் ஜஹான் திருமணம் செய்ததாக பெண்ணின் தந்தை கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது.
கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜஹான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யபட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஹாதியா முடிவில் தலையிட முடியாது
அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஹாதியா திருமணம் செய்தவர் நல்லவரா கெட்டவரா என்பதெல்லாம் அவருடைய முடிவு. அது சுதந்திரமாக எடுக்கப்பட்ட முடிவா என்பதும் அவருக்கு மட்டுமே தெரியும். ஹாதியா நீதிமன்றத்தை நாடிய போது, அவர் தன்னுடைய விருப்பப்படியே திருமணம் நடந்துள்ளதாக கூறி இருக்கிறார், இதோடு அந்த விஷயம் முடிந்து விட்டது என்று நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
யாருக்கும் உரிமை இல்லை
தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஹாதியா கூறும்போது, அதனை செல்லாது என நீதிமன்றம் எப்படி அறிவிக்க முடியும். யாருடன் செல்ல வேண்டும் என்பதை ஹாதியா தான் முடிவு செய்ய வேண்டும். அவரின் முடிவை கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
திருமணம் குறித்து விசாரிக்க முடியாது
ஜஹானிடம் தேசிய புலனாய்வு அமைப்பு தங்களின் விசாரணையைத் தொடரலாம், சந்தேகம் இருப்பின் கைது செய்யலாம். ஆனால் ஹாதியாவின் திருமணம் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
திருமணம் செய்ய உரிமை இருக்கிறது
ஹாதியா மேஜர் என்பதால் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்று கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். கடந்த நவம்பர் 27ம் தேதி ஹாதியா அவருடைய பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் ஹாதியா தன்னுடைய படிப்பை தொடரவும் நீதிமன்றம் அனுமதியளித்தது.