கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்! தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட்! அடுத்து என்ன
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் உள்ள RG Kar மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.9ம் தேதி முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கே பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம்: இதற்கிடையே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கைச் செவ்வாய்க்கிழமை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
31 வயதான முதுகலை பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிபிஐ: இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற ஒருவரை மட்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் தான் முதன்மை குற்றவாளி என்று கொல்கத்தா போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும், இந்த விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி தொடர் போராட்டங்கள் நடந்தது. இதற்கிடையே இந்த வழக்கைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
சிபிஐ தரப்பு இப்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது. குற்றம் நடந்த போது அந்த மருத்துவமனை முதல்வராக இருந்தவரிடம் சிபிஐ விசாரணையை நடத்தியுள்ளனர். குற்றம் நடந்த போது எங்கே இருந்தார் உட்பட பல கேள்விகளை சிபிஐ தரப்பு கேட்டுள்ளது. அடுத்து உடன் பணிபுரிந்த மருத்துவர்கள், இதர ஊழியர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போராட்டங்கள்: முன்னதாக இந்தச் சம்பவத்தில் உரிய விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி இருந்தனர். கடந்த வாரம் அங்கே நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. சுமார் 7000 பேர் திரண்ட நிலையில், அவர்களில் ஒரு பகுதியினர் மருத்துவமனைக்கு உள்ளே சென்று அடித்து நொறுக்கினர். அவர்கள் குற்றம் நடந்த இடத்தை நாசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், அங்குச் செல்ல முடியாததால் அவர்கள் மருத்துவமனையின் இதர பகுதிகளை அடித்து நொறுக்கினர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகச் சிலரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அங்கே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மருத்துவமனை அருகே போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications