சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிராவோவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு...புது குண்டை போடும் லலித் மோடி...
லண்டன்: ஐ.பி.எல். சூதாட்டத்தில் இந்திய வீரர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுமான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, மற்றும் ட்வைன் பிராவோ ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக லலித் மோடி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் பதிவு செய்துள்ள ட்விட்டில், இது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.சி.சி தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ளார்.
அதில், சுரேஷ் ரெய்னா, ரவீத்நிர ஜடேஜா, பிரோவோ ஆகியோர் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், அந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு சூதாட்ட தரகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூவருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நம்பகமான ஒருவரிடம் இருந்து தனக்கு தகவல் வந்ததாகவும் லலித் மோடி கூறியுள்ளார்.
மேலும் இந்த புகாரை ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம் கொண்டு செல்லுமாறு டேவ் ரிச்சர்ட்சனிடம் கூறியதாகவும் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் முடிக்கும் போது, இந்த புகார் உண்மையாக இருக்கக் கூடாது என்று தான் நம்பியதாகவும், ஆனால் அவ்வாறு உண்மையாக இருந்தால் மேலும் பலருக்கு சூதாட்டத்தில் தொடர்பிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்ததாக லலித் மோடி கூறியுள்ளார்.