எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சுஷ்மா சுவராஜ்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்.
டெல்லி: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுநீரகம் செயலிழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். தற்போது எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
உறவினர்களின் சிறுநீரகங்கள் அவருக்கு பொருந்தாத நிலையில், வெளியில் இருந்து சிறுநீரகம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உரிய அனுமதியுடன் வெளிநபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு பொருத்தப்பட்டு கடந்த 10ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களாக மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். சிகிச்சை முடிந்த பின் சுஷ்மாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.