குற்றச்செயலில் ஈடுபட்ட சுஷ்மா சிறைக்குப் போக வேண்டும்: ராகுல் காட்டம்
டெல்லி: தலைமறைவு குற்றவாளிக்கு உதவி கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தை 3வது நாளாக எதிர்க்கட்சிகள் இன்றும் முடக்கி வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ இருவருக்கும் ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
இது குறித்து கூறிய ராகுல் காந்தி, பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல.. நாட்டுக்கே தாம் பிரதமர் என்பதை மோடி உணர வேண்டும்.
மத்திய அமைச்சராக இருந்து கொண்டு சுஷ்மா ஸ்வராஜ் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் சிறைக்கு செல்லத்தான் வேண்டும் என்று சாடியுள்ளார்.