தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சுஷ்மா சுவராஜ் சிறப்பு வார்டுக்கு மாற்றம்
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுநீரகம் செயலிழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். தற்போது எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டார்.
உறவினர்களின் சிறுநீரகங்கள் அவருக்கு பொருந்தாத நிலையில், வெளியில் இருந்து சிறுநீரகம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உரிய அனுமதியுடன் வெளிநபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு பொருத்தப்பட்டு கடந்த 10ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் சுஷ்மா சுவராஜூன் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து, விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.