இந்தியத் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்... கெர்ரியிடம் சுஷ்மா அதிருப்தி
டெல்லி: இந்தியத் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்த புகாருக்கு, இந்தியாவின் மதிப்பு குறையாத வகையில் இருதரப்பு உறவு தொடரும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பதிலளித்துள்ளார்.
இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இந்தியா வந்தார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி.
நேற்று எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது..

அப்போது, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை, அமெரிக்க உளவு அமைப்புகள் கண்காணித்ததாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜான் கெர்ரியிடம் மத்திய அரசு கவலை தெரிவித்தது.
நேற்று மதியம் முதல் இரவு வரை, இரு தலைவர்களும் மேற்கொண்ட சந்திப்பின் போது, இந்தியாவின் கவலையை, அமைச்சர், சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
நட்பு நாடான அமெரிக்காவின் இந்தச் செயல் சரியானதல்ல எனச் சுட்டிக் காட்டிய சுஷ்மா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய மக்களை கோபமடையச் செய்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஜான் கெர்ரி, 'பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிற தகவல்கள் பரிமாற்றம் பரஸ்பரம் முக்கியமானது. இந்தியாவின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருதரப்பு உறவு தொடரும்' என உறுதியளித்தார்.
மேலும், மும்பையில், 2008ல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வர, பாகிஸ்தான் அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும், கெர்ரியிடம் மத்திய அமைச்சர் சுஷ்மா வலியுறுத்தியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications