ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்து நவ. 24 வரை நீட்டிப்பு !
சுங்க கட்டணங்கள் ரத்து நவம்பர் 24-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 24-ந் தேதி நள்ளிரவு வரை சுங்க கட்டணத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் பணப்புழக்கம் தடைபட்டுப் போயுள்ளது. திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமலும் தேவைக்கேற்ப வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க முடியாமலும் 1 வாரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாடு தழுவிய அளவில் சுங்கக் கட்டணங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த சுங்கக் கட்டண ரத்து இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது நவம்பர் 24-ந் தேதி நள்ளிரவு வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
முன்னதாக நவம்பர் 14, 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சுங்க கட்டணம் ரத்து நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்னும் ரூபாய் தட்டுப்பாடு இயல்பு நிலைக்கு திரும்பாததால் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டுக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications