டெல்லியில் ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறார் விஜயகாந்த் மச்சான் சுதீஷ்
டெல்லி: தொடர்ந்து விடாமல் அடம் பிடித்தபடி இருக்கும் தேமுதிகவின் நகர்வை எந்த ரூபத்தில் போய்ப் பார்த்தாலும் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவுள்ளார்.
அதெல்லாம் ராஜ்நாத் சிங்கைப் பார்த்துப் பேசிய பிறகே கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்று தொடர்ந்து தேமுதிக சொல்லி வருவதால்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாம்.
சமீபத்தில் டெல்லிக்குப் போயிருந்த விஜயகாந்த் அங்கு பிரதமரைச் சந்தித்த பின்னர் ராஜ்நாத் சிங்கையும், சோனியாவையும் அட் ஏ டைமில் சந்திக்கத் திட்டமிட்டுக் காத்திருந்தார். ஆனால் இரண்டுமே பேருமே விஜயகாந்த்தின் வித்தியாசமான நகர்வைப் பார்த்து ஜெர்க் ஆகி சந்திக்காமலேயே எஸ்கேப் ஆகி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இதனால் கடுப்பாகிப் போன விஜயகாந்த், ராஜ்நாத் சிங்கை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும் என்று பாஜகவிடம் கூறி விட்டார். இதையடுத்தே தற்போது சிங்கும், சுதீஷும் சந்தித்துப் பேசவுள்ளனராம்.
இதற்காக தமிழகத்திலிருந்து பொன் ராதாகிருஷ்ணன் டெல்லிக்குப் போயுள்ளார். அதேபோல இல. கணேசன், மோகன்ராஜுலு ஆகியோரும் டெல்லி வருகிறார்கள். அனைவரும் சுதீஷை அழைத்துக் கொண்டு ராஜ்நாத் சிங்கை பார்க்கப் போகிறார்களாம்.
அனேகமாக இன்றைக்குள் தேமுதிகவின் நிலைப்பாடு தெரிந்து விடும் என்று பாஜக தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.