உதகையில் நித்தியானந்தா- பாஜக பிரமுகருக்கு ஆளுநர் பதவி கிடைக்க யாகம்?
உதகமண்டலம்: சர்ச்சை சாமியார் நித்தியானந்தா உதகமண்டலத்திற்கு வருகை தந்தார். அங்கு பாஜக பிரமுகரான முன்னாள் எம்.பி. மாஸ்டர் மாதனுக்கு ஆளுநர் பதவி கிடைக்க அவர் யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. அதேசமயம் உதகையில் ஆசிரமம் அமைக்கப் போவதாகவும், அதற்கான இடத்தை தேர்வு செய்ய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு, திருவண்ணாமலையில் ஆசிரமம் நடத்திவரும் நித்தியானந்தா, நேற்று காலை தனது சீடர்களுடன் உதகமண்டலம் வந்தார். அங்கு சேரிங்கிராஸ் அருகே நீலகிரியின் முன்னாள் எம்.பியும் பாஜக பிரமுகருமான மாஸ்டர் மாதனின் சகோதரர் மகன் தீபக் போஜராஜ் வீட்டில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
யாகத்தில் அரசியல் பிரமுகர்கள்
இந்த பூஜையில் மாஸ்டர் மாதன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமார், நஞ்சநாடு போஜ கவுடர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் பதவிக்கு அடித்தளம்
பின்னர் பக்தர்கள் மற்றும் சீடர்கள் முன்னிலையில் நித்தியானந்தாவுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு மாம்பழங்கள் பிரசதமாக வழங்கப்பட்டன. இந்த யாகமே மாஸ்டர் மாதனுக்கு ஆளுநர் பதவி கிடைப்பதற்காக நடத்தப்பட்டதாக வதந்தி பரவியது.
குன்னூரில் பூஜை
இதனை தொடர்ந்து உதகை அருகே உள்ள தாவெனெ கிராமத்தில் உள்ள ஒரு பக்தர் வீட்டிற்கும், குன்னூரில் உள்ள மற்றொரு பக்தர் வீட்டுக்கும் சென்று சிறப்பு பூஜை செய்தார் நித்தி. அதன் பின்னர் அவர் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
ஆசிரமம் அமைக்கிறார் நித்தி?
நித்தியானந்தா ஊட்டி அருகே குளிச்சோலை செல்லும் பகுதியில் நித்தியானந்தா ஒரு ஆசிரமம் அமைக்க உள்ளதாகவும், இதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக அவர் ஊட்டிக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.