அயோத்தி ராமஜென்ம பூமியில் பக்தர்களுக்கு வசதிகள் செய்துதர உத்தரவிடுங்கள்- சு.சுவாமி கோர்ட்டில் மனு!
டெல்லி: அயோத்தியில் ராமஜென்ம பூமிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க உத்தரகோரிய தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவில் "அயோத்தியில் சர்ச்சைக்குறிய பகுதியில் எந்த ஒரு கட்டிடத்தையும் எழுப்ப கூடாது என்றுதான் 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை இந்த உத்தரவு தடுக்கப்போவதில்லை.
பல மில்லியன் ஹிந்துக்கள், ராமஜென்ம பூமிக்கு தரிசனம் செய்யவும், பூஜைகள் செய்யவும் வருவது வழக்கம். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கோர்ட்டை அணுகியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "உங்கள் கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதா என்பதை சோதித்து பாருங்கள். அதன்பிறகு நாங்கள் வழக்கை விசாரிக்கிறோம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.