ஐ.நா. சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக வெளியுறவுத் துறை செயலளர் செய்யது அக்பருதீன் நியமனம்
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் செய்யது அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக தற்போது இருப்பவர் அசோக் முகர்ஜி ஓய்வு பெறுவதையடுத்து அந்த பதவிக்கு புதிதாக வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் செய்யது அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக பதவி வகித்தவர் செய்யது அக்பருதீன். பின்னர் அந்த பதவியில் இருந்து வெளியுறவுத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பின்னர் மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். மேலும் அண்மையில் டெல்லியில் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தியா - ஆப்பிரிக்க உச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டார். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்த செய்யது அக்பருதீன் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.