நாடு முழுவதும் ஜன. 1 வரை நடந்த ஐ.டி. ரெய்டில் ரூ.562 கோடி பறிமுதல்
நாடு முழுவதும் நடந்த வருமான வரித் துறை சோதனையில் 562 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு ஜனவரி ஒன்றாம் தேதி வரை வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகள் மற்றும் ஆய்வுகளில் ரூ.562 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8 ம் தேதி இரவு திடீரென அறிவித்தார். இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி வரை வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகள் மற்றும் ஆய்வுகளில் சுமார் 562 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ரூ.110 கோடி புதிய நோட்டுகளாகும்.
ஜனவரி ஒன்றாம் தேதி வரை கணக்கில் காட்டப்படாத மொத்த வருமானம் ரூ.4,663 கோடி வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 5062 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் இதுவரை 1100 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 556 ஆய்வுகளும், 253 சோதனைகளும், 289 பறிமுதல்களும் நடைபெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications