சிவன் கோவில் மீதுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது: துவாரகை சங்கராச்சாரியார் கிளப்பும் புது சர்ச்சை!!
டெல்லி: ஆக்ராவில் சிவன் கோவில் மீதுதான் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது என்று துவாரகை பீட சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி புது சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சர்ச்சைகளின் சங்கமமாக இருப்பவர் துவாரகை பீட சங்கரச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி. அண்மையில் ஷீரடி சாய்பாபா ஒரு முஸ்லிம்.. அவரை இந்து கடவுளாக வழிபாடு நடத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிராக ஷீரடி சாய்பாபா பக்தர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வழக்குகளைப் போட்டனர். துவாரகை சங்கராச்சாரி கொடும்பாவிகளையும் அவர்கள் எரித்தனர். இந்நிலையில் தாஜ்மஹால் குறித்து அவர் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
இது குறித்து ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறுகையில், ராஜா பரம்தேவ் என்பவரால் கி.பி. 1156ஆம் ஆண்டு ஒரு சிவன் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவில் மீதுதான் ஷாஜஹான் கி.பி. 1631-32ஆம் ஆண்டு தாஜ்மஹாலை கட்டியிருக்கிறார். தாஜ்மஹாலுக்கு கீழே சிவன் கோவில் இருக்கிறது என்றார்.
மேலும் நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கான தடையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி வலியுறுத்தியும் உள்ளார்.