4 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம்: ரூ.50,000 வாங்கிக் கொண்டு கருவை கலைக்க பஞ். உத்தரவு
பாட்னா: பீகாரில் 4 சகோதரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளார். நியாயம் கேட்டவரை ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு கருவை கலைக்குமாறு பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாக்கோலா பாலாஷ்மணி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 4 சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் தற்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அவர் நீதி கேட்டு பஞ்சாயத்தை அணுகினார். ஆனால் பஞ்சாயத்தாரோ ரூ.50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு கருவை கலைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
பஞ்சாயத்தார் கருவை கலைக்குமாறு மிரட்டியதை அடுத்து சிறுமியின் தாய் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியின் தந்தை தனது குடும்பத்தை காப்பாற்ற ராஜஸ்தானில் வேலை செய்து வருகிறார். சிறுமியின் தாய் விவசாய கூலி.
இந்நிலையில் இது குறித்து போலீஸ் அதிகாரி ஸ்வேதா குப்தா கூறுகையில்,
தன்னை 4 சகோதரர்கள் சேர்ந்து 7 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் சிறுமி தெரிவித்தார். நான் கிஷன்கஞ்சில் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து 5 சிறுமிகள் பெரும்பாலும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்று பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானதாக புகார் தெரிவித்தனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சிறுமிகள் தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை கர்ப்பமாகும் வரை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர் என்றார்.
கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் வாழும் மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் முஸ்லீம்கள். மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இங்கு வறுமையால் வாடுவோர் அதிகம். மேலும் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ள மாவட்டம் கிஷன்கஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.