ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் 5 மாதங்கள் இருந்தவர்.. நெல்லையில் கைதான வாலிபர் பற்றி திடுக்
டெல்லி: நெல்லை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சுபானி ஹாஜி மொய்தீன் என்ற அபு மீர் (31), சிரியாவில் சுமார் 5 மாத காலம் தங்கியிருந்து தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டைகளில் ஈடுபட்டு வந்த தகவலை இந்திய பாதுகாப்பு ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் உயர்மட்ட தலைவர்களையும், சுபானி சந்தித்து பேசியுள்ளதாக விசாரணையின்போது அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சுபானியின் நடவடிக்கைகளை இந்திய பாதுகாப்பு ஏஜென்சி தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது. அவர் சமீபத்தில்தான், சிரியாவிலிருந்து தமிழகம் திரும்பியுள்ளதை பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.
தமிழகம், கேரளாவில் சில தலைவர்களை கொலை செய்வது இந்த தீவிரவாதிகளின் நோக்கம் என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஆரீப் மஜீத் எப்படி தீவிரவாதிகளுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிராக சண்டை போட்டுவிட்டு தாயகம் திரும்பினாரோ அதே போன்றவர்தான் சுபானி என்கிறார்கள் பாதுகாப்பு ஏஜென்சியினர்.
எனவே சுபானியிடமும் கேரளாவில் அதேநேரம் கைது செய்யப்பட்ட எஞ்சிய தீவிரவாத ஆதரவாளர்களிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளது பாதுகாப்பு ஏஜென்சி.