உச்சநீதிமன்றத்தில் கேரளா ஆளுநருக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு வழக்கு தீர்ப்பை முன்வைத்து கடும் வாதம்
டெல்லி: தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கேரளா ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்குக்கு பொருந்தாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை உச்சநீதிமன்றம் மே 6-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கேரளாவில் இடதுசாரிகள் அரசு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் ஆளுநராக ஆரிப் முகமது கான் முன்னர் வகித்து வருகிறார்.

ஆரிப்முகமது கான் ஆளுநராக பதவி வகித்த காலத்தில், 2021-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2023-ம் ஆண்டு கேரளா மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.
மேலும் 2024-ம் ஆண்டு மற்றொரு வழக்கையும் கேரளா அரசு தாக்கல் செய்திருந்தது. மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் முடிவுக்கு எதிரானது இந்த வழக்கு.
தற்போது கேரளாவின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலத்திலும் இந்த 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரப்படவில்லை.
இந்த நிலையில் கேரளா அரசு தாக்கல் செய்திருந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன..
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஎஸ் நரசிம்ஹா மற்றும் ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. கேரளா அரசின் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் ஆஜரானார். முதலில் இதனை கவனிக்காத நீதிபதிகள், உங்களை பார்க்கும் போதெல்லாம் அட்டர்னி ஜெனரல் என்றே அழைத்து பழகிவிட்டோம் என குறிப்பிட்டனர்.
பின்னர் கேகே வேணுகோபால் தமது வாதத்தை முன்வைக்கும் போது, கேரளா அரசு தாக்கல் செய்த 2 மனுக்களுமே உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தமிழ்நாடு அரசு வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.ஆகையால் அந்த தமிழ்நாடு அரசு வழக்கின் தீர்ப்பு இந்த வழக்குக்கும் பொருந்தும் என்றார்.
ஆனால் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர், உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8-ந் தேதி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பு, கேரளா அரசின் வழக்குக்குப் பொருந்தாது; கேரளா அரசின் வழக்கு வேறுபட்ட ஒன்று; இந்த வழக்கை தனித்தே விசாரணை செய்ய வேண்டும்; ஆகையால் மே 6-ந் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மே 6-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரளாவின் தற்போதைய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் கடுமையாக விமர்சித்திருந்தார். நாடாளுமன்றத்தையும் மீறிய அதிகாரம் படைத்ததா உச்சநீதிமன்றம் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications