எர்ணாகுளத்தில் ஹோட்டல் அறை கிடைக்கவில்லை.. கேரள உதவி மையங்களும் இல்லை.. நீட் மாணவர்கள் கடும் அவதி
தமிழகத்திற்கு வெளியே மையங்கள் அமைக்கப்பட்டது ஒரு சிரமம் என்றால், அந்த தடையை தாண்டிய பிறகும், தேர்வு மையங்களை கண்டறிவது மற்றொரு சவாலாக மாறியுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழ் மாணவ, மாணவிகளுக்கு ஹோட்டல் அறைகள் கிடைக்காததால் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். தேர்வு மையங்களை கண்டறிவதற்கும் அவர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளோர் எண்ணிக்கைதான் அதிகம். சுமார் 5300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேர்வு எழுத சென்றுள்ளனர். அதிலும், எர்ணாகுளம் நகரில்தான் அதிகம் பேருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய உதவி மையங்களை ரயில், பஸ் நிலையங்களில் அமைக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இருப்பினும், எர்ணாகுளத்திற்கு இன்று சென்று சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஹோட்டலில் அறைகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நிலைமையை தெரிந்து கொண்ட ஹோட்டல் நிர்வாகங்கள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனவாம். தேர்வு மையங்களை சுற்றியுள்ள விடுதிகளில் அறை வாடகை விண்ணை தொடுகிறது.
இதுகுறித்து எர்ணாகுளத்திலுள்ள மாணவ, மாணவிகள் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பே இங்கு வந்தவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விடுதிகள் கிடைத்துள்ளன. ஆனால், இன்றோ நேற்று இரவோ இங்கு வந்தவர்களுக்கு விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் அதிக கட்டணம் கேட்கிறார்கள் என்று தெரிவித்தனர். மேலும், தேர்வு மையத்தை கண்டறிவது தங்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், இதுபற்றி வழிகாட்ட கேரள அரசு சார்பில் மையங்கள் எதுவுமே இல்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்திற்கு வெளியே மையங்கள் அமைக்கப்பட்டது ஒரு சிரமம் என்றால், அந்த தடையை தாண்டிய பிறகும், தேர்வு மையங்களை கண்டறிவது மற்றொரு சவாலாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications