"சாப்பாடு கூட இல்லை!" வங்கதேச போராட்டத்தால் பரிதவிக்கும் தமிழக மாணவர்கள்- உடனே தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் அங்குப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சுமார் 30 முதல் 50 தமிழக மாணவர்கள் உணவின்றி எல்லையில் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அவர்களை மீட்க இப்போது அயலக தமிழர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் இப்போது மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறி இருக்கிறது

இதற்கிடையே இந்த வன்முறை போராட்டத்தால் அங்குப் படிக்கச் சென்ற வெளிநாட்டு மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகத் தமிழக மாணவர்கள் அங்கு உணவின்றி தவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
போராட்டம்: வங்கதேசத்தில் இம்மாத தொடக்கம் முதலே மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வருகிறது. அங்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. அந்த இட ஒதுக்கீடு கடந்த 2018ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இம்மாத தொடக்கத்தில் வங்கதேச ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அதில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்தது செல்லாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
என்ன காரணம்: மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஜூன் 5ம் தேதி அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவே மாணவர்களின் போராட்டத்திற்குக் காரணமாகும். இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வன்முறை தொடர்கிறது.
ஊரடங்கைத் தாண்டி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அங்கே கடந்த வியாழக்கிழமை முதலே இணையச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள்: இந்த போராட்டத்தால் அங்குப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்கள், குறிப்பாக அங்குப் படிக்கும் தமிழக மாணவர்களும் எல்லையில் உணவின்றி தவிக்கும் சூழல் உருவாகி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
எல்லையில் தவிப்பு: அதாவது போராட்டம் தொடங்கிய உடன் முதலில் விருப்பப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் தாயகம் திரும்பலாம் எனக் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. பிறகு நிலைமை மிக மோசமாகச் செல்வதை உணர்ந்த கல்லூரி நிர்வாகம் அனைவரும் கட்டாயம் கிளம்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சுமார் 150 மாணவர்களைப் பேருந்துகளில் அழைத்து வந்த அங்குள்ள கல்லூரி நிர்வாகம் அவர்களை எல்லையில் விட்டுள்ளது. பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து தாங்களாகவே எல்லையைக் கடந்துள்ளனர்.
உணவு கூட இல்லை: இப்போது அந்த மாணவர்கள் மேற்கு வங்க எல்லைப் பகுதியில் உள்ள ஹில்லி என்ற பகுதியில் உள்ளனர். இருப்பினும், அவர்கள் காலை முதலே உணவின்றி தவித்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் இருந்து பேருந்து, ரயில்கள் இல்லாத நிலையில் விமான டிக்கெட் விலையும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் அங்குள்ள மாணவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களில் 30 முதல் 50 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த 4 நாட்களாகவே வங்கதேசத்தில் இணையச் சேவை முடக்கப்பட்டதால் அவர்களால் வீடுகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது இந்திய எல்லைக்கு வந்த பிறகே அவர்கள் வீடுகளைத் தொடர்பு கொண்டு நிலைமையைத் தெரிவித்துள்ளனர். இப்போதும் வீடு திரும்ப வழியில்லாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், மாணவர்களை விமானம் மூலம் அழைத்து வரத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 2 விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் இன்று தாயகம் திரும்ப உள்ள நிலையில், 2ம் கட்டமாக 60 பேரை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications