குஜராத், மஹாராஷ்டிராவில் இருந்து மீனவர்கள் தமிழகம் புறப்பட்டனர்!
குஜராத், மஹாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் இன்று தமிழகம் புறப்பட்டுள்ளனர்.
அகமதாபாத் : ஓகி புயல் காரணமாக குஜராத், மஹாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் அரசு கொடுத்த டீசலைப் பெற்றுக் கொண்டு தமிழகம் புறப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 28ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தாறுமாறாக அடித்து வீசப்பட்டனர். கடலுக்கு சென்ற பலரது நிலைமை என்னவென்று தெரியாத நிலையில், குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா கடற்பகுதியில் சில மீனவர்கள் கரை ஒதுங்கினர்.

முதலில் குஜராத் கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், பின்னர் மீனவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்டதோடு கடந்த ஒரு வாரமாக அவர்களுக்கு உணவும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீனவர்களை தமிழகம் அழைத்து வர அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இதன்படி குஜராத் மாநிலம் வராவில் துறைமுகத்தில் இருந்த தமிழக மீனவர்களுக்கு அரசு தந்த ஆயிரம் லிட்டர் டீசலை பெற்றுக் கொண்டு சுமார் 50 படகுகளில் 500 மீனவர்கள் தமிழகம் திரும்புகின்றனர். அரசு அளித்த ரூ. 2 ஆயிரம் உதவித்தொகையை பெற்றுக்கொள்ளாமலேயே மீனவர்கள் தமிழகம் திரும்பி வருகின்றனர்.
இதே போன்று மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் இருந்து சுமார் 70 படகுகளில் 538 மீனவர்கள் அரசு அளித்த 750 லிட்டர் டீசலை பெற்றுக் கொண்டு தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளனர். ரத்னகிரியில் தேவ்காட் பகுதியில் இருந்து படகுகள் மூலம் மீனவர்கள் கடல்வழியாக பயணத்தை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications