குண்டு சத்தம் இல்லாத அமைதியான இந்தியாவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது- தூத்துக்குடி நர்ஸ் நெகிழ்ச்சி
கொச்சி: குண்டு சத்தம் இல்லாத அமைதியான இந்தியாவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று தாயகம் திரும்பிய தூத்துக்குடி நர்ஸ் மோனிஷா தெரிவித்தார்.
ஈராக்கில் இருந்து கொச்சி வந்த இந்திய விமானத்தில் இருந்து இறங்கியதும் அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய மோனிஷா "எங்கள் விடுதலைக்காக உழைத்த அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரவாதிகள் முதலில் மென்மையாகவே நடந்து கொண்டனர். ஆனால் கடைசி நாளில் திக்ரிட் நகரில் இருந்து மொசூல் கடத்தப்பட்டபோது மட்டும் சற்று கடுமையாக நடந்துகொண்டனர்.

மொசூலில் ஜெயில் போன்ற இடத்தில் எங்களை அடைத்து வைத்திருந்தனர். அதே நேரம் செல்போனில் பேசுவதற்கு அனுமதித்தனர். இந்திய தூதர அதிகாரிகள் எங்களை தொடர்புகொண்டு, பயப்படாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். பல நாடுகளும் நர்சுகளை விடுதலை செய்ய வலியுறுத்திக்கொண்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த காற்று.. இந்த இடம்.. என அனைத்துமே அழகாக உள்ளது. எப்போதும் குண்டு சத்தத்துக்கு நடுவில் இருந்த எனக்கு, அமைதியான இந்தியாவை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதனிடையே, விமான நிலையத்துக்கு நர்சுகளை வரவேற்க வந்திருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, "கேரள மக்கள் உணர்வுகளை தெரிந்துகொண்டு, மத்திய அரசு செயல்பட்டது. எனக்கு மட்டுமல்ல கேரள மக்கள் அனைவருக்கும் இதனால் மகிழ்ச்சி. அனைத்து தரப்பு ஒத்துழைப்பு காரணமாக இந்த 100 சதவீத வெற்றி சாத்தியப்பட்டது" என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications