பெங்களூரில் போலீஸ் முன்பு ஆப்பிரிக்க மாணவியை நிர்வாணமாக்கி, தாக்கிய கும்பல்
பெங்களூர்: பெங்களூரில் ஆப்பிரிக்க மாணவர் ஒருவரின் கார் மோதி 35 வயது பெண் பலியாகியுள்ள நிலையில் தான்சானியாவைச் சேர்ந்த மாணவியை பொதுமக்கள் நிர்வாணமாக்கி, தாக்கியுள்ளனர்.
வடக்கு பெங்களூரில் உள்ள ஹெசரகட்டாவைச் சேர்ந்த சபானா தாஜ்(35) என்பவர் கடந்த திங்கட்கிழமை மாலை தனது கணவருடன் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்த முகமது இஸ்மாயில்(21) என்ற மாணவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து தாஜ் மீது மோதினார். இதில் தாஜ் பலியானார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹெசரகட்டா அருகே உள்ள ஆச்சார்யா கல்லூரியில் படிக்கும் இஸ்மாயிலை கைது செய்தனர். இந்நிலையில் ஆச்சார்யா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் தான்சானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கார் விபத்து ஏற்பட்டு 30 நிமிடங்கள் கழித்து அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அவரை பார்த்த ஒரு கும்பல் அவரின் அடைகளை கிழித்து நிர்வாணமாக்கி, தாக்கி போலீசார் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அந்த மாணவியை காப்பாற்ற வந்த நபரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
அந்த மாணவி வேகன் ஆர் காரில் தனது நண்பர்கள் நான்கு பேருடன் வந்துள்ளார். அந்த கும்பல் அந்த 4 பேரையும் காரில் இருந்து இறக்கிவிட்டு வாகனத்தை தீ வைத்து எரித்தது. தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அந்த மாணவி அளித்த புகாரை பெற போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கிழிந்த உடையுடன் அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்தில் ஏற மாணவி முயற்சி செய்துள்ளார். ஆனால் பேருந்தில் இருந்த பயணிகள் அவரை சாலையில் பிடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications