வருமான வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் வாங்க தடை?
டெல்லி: வருமான வரி செலுத்துவோர், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
வருமான வரி செலுத்துவோர், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரை பொது வினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்க, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மாநில அரசுகளுடன் பேச உள்ளார்.
இது குறித்து பாஸ்வான் கூறுகையில்,
பொது வினியோக திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றின் கீழ் பயன்பெறும் ஏழைகளின் எண்ணிக்கையை கண்டறிவது கடினம். ஆனால் வரி செலுத்துவோர், அரசு அதிகாரிகளை கண்டறிவது எளிதானது. அதனால் அவர்களை கண்டறிந்து பொது வினியோக திட்ட வரம்பில் இருந்து நீக்குவதும், ரேஷன் பொருட்கள் வாங்க தடை விதிப்பதும் எளிது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பிரிவு 1 மற்றும் 2 அதிகாரிகள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் பொது வினியோக திட்ட வரம்பில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை பிற மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து நான் விரைவில் மாநில அரசுகளுடன் பேச உள்ளேன்.
உணவு பாதுகாப்பு திட்டம் கைவிடப்படமாட்டாது. உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசம் முடிந்துள்ளது. இருப்பினும் அந்த திட்டத்தை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் அளிக்கப்படும். இந்த திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருந்தும் வருமான வரி செலுத்துவோர், அரசு உயர் அதிகாரிகளின் பெயர்களை நீக்குமாறு மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications