கண்ணியமாக ஆடை அணியுங்கள் என்று எம்.பி கூறியது தப்பு!.. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அமளி!!
டெல்லி: பெண்களை கண்ணியமாக ஆடை அணிய கூறியதற்காக தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
லோக்சபாவில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராஜமுந்திரி தொகுதியின் எம்.பி.யான முரளி மோகன், பெண்கள் கவர்ச்சியாக ஆடை அணியாமல், கண்ணியமாக ஆடை அணிய வேண்டும். பாலியல் உணர்வை தூண்ட ஆபாசம் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
உடனடியாகவே, பல கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.பிக்கள் முரளி மோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். சிலர், முரளி மோகனை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினர்.
இந்நிலையில் ராஜ்யசபாவிலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. ராஜ்யசபாவில் வெளிளையனே வெளியேறு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள், முரளி மோகன் லோக்சபாவில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் பாஜக எம்.பிக்களோ, ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு மத்திய அரசு செய்து உதவிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இரு தரப்பும் கோஷமிட்டதால் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அவையை 15 நிமிட காலத்துக்கு ஒத்தி வைத்தார்.