குஜராத்தில் களமிறங்கும் கெஜ்ரிவால்- மோடியை ஆதரிக்கப் போகும் ஹசாரே!!
டெல்லி: காலம் மாற காட்சிகளும் மாறின என்பது அரசியல் அரங்கில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் ஆத் ஆத்மி கட்சி களமிறங்கப் போகிறது. அங்கே கெஜ்ரிவாலுக்கு எதிராக மோடிக்கு ஆதரவாக கெஜ்ரிவாலின் குருநாதர் அன்னா ஹசாரேவும் இறங்க இருக்கிறார்.
வலுவான லோக்பால் மசோதா.. ஒற்றை முழக்கத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்தார் அன்னா ஹசாரே. அவரது சிஷயரான கெஜ்ரிவாலோ தனியே அரசியல் கட்சியையும் உருவாக்கி டெல்லியில் ஆட்சியையும் அமைக்கிறார்.
இப்போது கெஜ்ரிவால், ஹசாரே என்ற ஊழல் எதிர்ப்புக்கான இரண்டு முகங்களை பயன்படுத்துவதில் பிரதான அரசியல் கட்சிகள் இடையே போட்டா போட்டி உருவாகியுள்ளது.

குஜராத், ஹரியானா
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் மற்றும் ஹரியானாவில் கவனம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக குஜராத்தில் களம் இறங்குகிறது ஆம் ஆத்மி.

ஹசாரேவுக்கு பாஜக ஆதரவு
ஆனால் கெஜ்ரிவாலின் குருநாதர் அன்னா ஹசாரேவுக்கு இப்போது பாஜக வலிய ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ராகுலை பாராட்டி ஹசாரேவும் ஹசாரேவை பாராட்டி ராகுலும் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஹசாரேவை வலிய ஆதரித்துப் பேசியிருக்கிறார்.

திஹாரில் போட்டவர்கள்தானே..
"லோக்பால் மசோதா நிறைவேற ஒரே ஒருநபர்தான் காரணம்...அவர்தான் அன்னா ஹசாரே.. அவரை காங்கிரஸ் கட்சி திஹார் சிறையில் அடைத்துவிட்டு இப்போது பேசுகிறார்களே என்று கொந்தளித்திருந்தார். அத்துடன் ஹசாரேவை புகழ்ந்து தள்ளி பேட்டியெல்லாம் கொடுத்திருக்கிறார் ராஜ்நாத். இதைப் போலவே ஹசாரே தரப்பு முகாமில் இருந்தும் மோடியை புகழ்வது தொடர் பேச்சாகி வருகிறது

மோடிக்கு ஆதரவு
இதை சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், குஜராத்தைத்தான் கெஜ்ரிவால் அடுத்த களமாக வைத்திருக்கிறார். அங்கு கெஜ்ரிவால் கால் பதித்தால் மோடிக்கு ஆதரவாக ஹசாரேவை பாஜக முன்னிறுத்தலாம் என்பதையே காட்டுகிறது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications