ஏன்டா என் வீட்டு வாசலில் காரை நிறுத்தின?: தட்டிக் கேட்ட சாப்ட்வேர் என்ஜினியரின் மண்டை உடைப்பு
டெல்லி: டெல்லியில் தனது வீட்டுக்கு முன்பு காரை நிறுத்த வேண்டாம் என்று கூறிய சாப்ட்வேர் என்ஜினியரை 6 பேர் சேர்ந்து செங்கல், இரும்புக் கம்பி, கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள ஷாபூர் ஜாட் பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ் பவார்(32). சாப்ட்வேர் என்ஜினியர். கடந்த சனிக்கிழமை மதியம் பவாரின் வீட்டுக்கு முன்பு வழியை மறித்துக் கொண்டு பக்கத்துவீட்டுக்காரரான ஷ்ராவன் குமாரின் கார் நின்றுள்ளது. இதையடுத்து பவார் குமாரின் வீட்டுக்கு சென்று அவரது காரை தனது வீட்டு வாசலில் இருந்து அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு ஷ்ராவன் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் சேர்ந்து பவாரை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி பவார் கூறுகையில்,
வழியை மறிக்கிறதே என்று குமாரின் வீட்டுக்கு சென்று அவரது காரை அகற்றுமாறு கூறினேன். ஆனால் யாருமே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மீண்டும் நான் தெரிவித்தபோது குமாரின் சகோதரர் வந்து என்னை திட்டியதுடன், கொன்றுவிடுவேன் என மிரட்டினார். இந்நிலையில் குமாரின் உறவினர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து என்னை தாக்கினர்.
அவர்கள் என் தலையில் மார்பிள் கல்லை போட்டனர், இரும்பிக் கம்பி மற்றும் கட்டையால் என்னை தாக்கினர். இதில் எனது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தேன். என் தலையில் இரண்டு தையல் போட்டுள்ளனர். மேலும் என் கை, கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.