பால்கனியிலிருந்து இன்னொரு பால்கனிக்குத் தாவிய இளம் பெண் கீழே விழுந்து பரிதாப சாவு

11வது மாடியிலிருந்து அவர் கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை அதிகாலையில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் சங்கர்நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கவிதா ஆறுமுகம் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். தனது நண்பரும், வனவிலங்குகள் குறித்த படங்களை எடுப்பவருமான கல்யாண் வர்மாவின் வீட்டுக்கு வந்திருந்தார் கவிதா.
பின்னர் அன்று இரவு கல்யாண், கவிதா, இன்னொரு தோழி வித்யா ஆகியோர் அதே பகுதியில் ஒரு வீட்டில் நடந்த பார்ட்டிக்குப் போயிருந்தார்கள். போய் விட்டு கல்யாண் வீட்டுக்குத் திரும்பினர்.
அதன் பின்னர் நடந்தது குறித்து கல்யாண் கூறுகையில், அதிகாலை 2 மணியளவில் நாங்கள் வீடு திரும்பினோம். இரண்டே கால் மணியளவில் பால்கனிக்கு அருகே கவிதா நின்றிருந்தார். அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது என்று கூறியுள்ளார்.
கவிதாவைக் காணவில்லை என்றதும் கல்யாணும், வித்யாவும் வீடுமுழுக்கத் தேடியுள்ளனர். பின்னர் பால்கனிக்குப் போய்ப் பார்த்தனர். அங்கும் இல்லை. கீழே குணிந்து பார்த்தபோது கவிதா ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்து அதிர்ந்தனர்.
கவிதாவின் தாய்மாமன் சல்தான்ஹா இதுகுறித்து கூறுகையில், கவிதா தனது பெட்ரூம் பால்கனியிலிருந்து அருகில் மூன்றரை அடி தொலைவில் இருந்த லிவிங் ரூம் பால்கனிக்குத் தாவ முயற்சித்துள்ளதாக தெரிகிறது. அப்போதுதான் அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம்தான் இந்தியா திரும்பியிருந்தார் கவிதா. அவரது தங்கையின் திருமணத்திற்காக அவர் பெங்களூர் திரும்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications