ஓடத் தொடங்கியது மும்பை மெட்ரோ ரயில்.. எடுத்த எடுப்பிலேயே தொழில்நுட்பக் கோளாறுடன்!
மும்பை: மும்பையில் இன்று மெட்ரோ ரயில் போக்குவரத்து முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால் முதல்வர் பிருத்விராஜ் சவான் தொடங்கி வைத்த ரயில் எடுத்த எடுப்பிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ககோக்பருக்கு அருகே சுமார் அரை மணி நேரம் நின்று விட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
தொடக்கத்திலேயே தொழில்நுட்பக் கோளாறா என்ற எள்ளலும் மும்பைவாசிகளிடம் எதிரொலித்தது.
மும்பை வெர்சோவா ரயில் நிலையத்தில் முன்னதாக மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்தார் சவான். அந்த ரயில் ஜக்ரத் நகர் ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்று விட்டது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு அது புறப்பட்டுச் சென்றது.
3 ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் மெட்ரோ ரயில் போக்குவரத்து மும்பையில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக வெர்சோவா முதல் ககோக்பர் வரை ரயில் இயக்கப்படுகிறது. இதன் தூரம் 11.5 கிலோமீட்டர் ஆகும். ஒரு மாதம் வரை ரயிலில் பயணம் செய்ய ரூ 10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.