மீன் குழம்புக்காக சண்டை... உறவினரின் 3 வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த இளைஞர் கைது
மீன் சாப்பாட்டிற்காக குழந்தையைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: மீன் சமைத்து தரவில்லை என்பதற்காக உறவினரின் 3 வயது குழந்தையை தரையில் தூக்கி வீசிய இளைஞரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையின் லால்ஜிபாடா பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப் சாஹா. காய்கறி வியாபாரியான இவருக்கு, மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். ஷெரிபின் வீட்டின் அவரது உறவினரான 19 வயது நவாஸ் சாஹாவும் தங்கியிருந்தார்.

விருந்தாளியான நவாஸ் சாஹா, தான் தங்கியிருப்பதற்கான மற்றும் சாப்பிடுவதற்கான செலவை ஷெரிப்பிடம் மாதாமாதம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில், தமக்கு மீன் சமைத்து தருமாறு ஷெரிப்பின் மனைவியிடம் நவாஸ் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த ஷெரிபுக்கும் நவாசுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் தகராறில் ஈடுபட்டிருந்தபோது, ஷெரிப்பின் மூன்று வயது மகள் குடியாவை, நவாஸ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. நவாஸ் அக்குழந்தையைத் தூக்கி கோபத்தில் தரையில் அடித்துள்ளார். இதில், குழந்தை குடியாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, குழந்தையை அருகில் உள்ள பொதுமருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நவாஸ் சாஹாவை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications