ஹவுரா தாவரவியல் பூங்காவில் 16 வயது சிறுமி கும்பலால் பலாத்காரம்... மே.வங்கத்தில் அக்கிரமம்
ஹவுரா: மேற்கு வங்கத்தில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஹவுரா பொட்டானிகல் கார்டனில் 16 வயது சிறுமி ஒருவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பொட்டானிக்கல் கார்டன் ஒன்று உள்ளது. கடந்த வெள்ளியன்று மாலை அங்குள்ள ஏரி ஒன்றின் அருகில் சுயநினைவற்ற நிலையில் ஒரு சிறுமி கிடப்பதை பூங்கா பாதுகாவலர் கண்டார். உடனடியாக இது தொடர்பாக பூங்கா நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
பூங்கா நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அப்பெண்ணை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவரை பலர் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்துள்ளதைக் கண்டறிந்தனர்.
பூங்காவில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளில் அப்பெண், இளைஞர் ஒருவருடன் பூங்காவிற்குள் வருவதும், பின்னர் மறைவான பகுதி ஒன்றிற்கு செல்வதும் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண் முராரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காததால், வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண் ரயில் மூலமாக ஹவுரா வந்துள்ளார். அப்போது ரயில் நிலையத்தில் சினேகமான ஆண் ஒருவருடன் அவர் ஹவுரா பொட்டானிக்கல் கார்டனுக்கு வந்துள்ளார். அங்கு அப்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அவர் கொடுத்துள்ளார். அதன் பிறகு அப்பெண்ணை, அழைத்து வந்த அந்நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கும்பலாக பலாத்காரம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகல் நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படுகின்ற பொட்டானிக்கல் கார்டனில் நடந்த இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications