பாலியல் தொல்லை விவகாரம்: விசாரணை நடத்த கமிஷன் அமைத்தது டெஹல்கா
டெல்லி: டெஹல்கா வார இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான சக பெண் பத்திரிகையாளரின்பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அந்நிர்வாகம் கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது.
டெஹல்கா வார இதழில் நிறுவன ஆசிரியருமான தருண் தேஜ்பால், சக பெண் பத்திரிகையாளருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அண்மையில் கோவாவில் நடைபெற்ற அப்பத்திரிகையின் நிகழ்ச்சி ஒன்றிலும் இதேபோல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அப்பெண் பத்திரிகையாளர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். இதனால் தருண் தேஜ்பால் தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன் 6 மாத காலத்துக்கு ஆசிரியர் பதவியில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இதை அப்பெண் பத்திரிகையாளர் ஏற்கவில்லை.
பணியிடத்தில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல் பல தரப்பில் இருந்தும் டெஹல்கா நிறுவனத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது விசாரணை கமிஷன் அமைக்க டெஹல்கா நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த கமிஷனின் தலைவராக பெண்கள் உரிமைகள் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஊர்வசி புதாலியா இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.