காற்று மாசுபாட்டை குறைக்க குதிரையில் பயணித்த லாலுவின் மகன் தேஜ்பிரதாப் !
பாட்னா: பீகாரில் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ் பிரதாப் யாதவ், குதிரையில் பயணம் செய்தார்.
சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதையடுத்து லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி பிரசாத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மற்றொரு மகனான தேஜ் பிரதாப் யாதவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. அவருக்கு சுகாதாரத் துறையுடன் சுற்றுச்சூழல் துறையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது இல்லத்தில் இருந்து அலுவலகம் வரை தேஜ் பிரதாப் யாதவ் குதிரையில் சனிக்கிழமை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிகையில், பீகார் தலைநகர் பாட்னா உள்பட பல இடங்களில் மாசு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த முயற்சி என்றும் குதிரை, சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்துவதால் மாசுவைக் குறைக்க முடியும். காற்று மாசுபாட்டை குறைக்கவே குதிரையில் சவாரி மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
தேஜ் பிரதாப் யாதவின் இச்செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் பிரேம் குமார் கூறுகையில், பீகார் அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறும் வேளையில் சுகாதாரத் துரை அமைச்சர் தேஜ்பிரதாப் யாதவ் ஆனந்தமாக குதிரை சவாரி மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது' என்றார்.
வாகனங்களில் செல்வதால் ஏற்படும் மாசுவை குறைக்க தேஜ்பிரதாபின் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பிற்காக உடன் செல்லும் காவலர்களும் குதிரையிலும், நடந்து செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications