அழுது அடம்பிடித்த 3 வயது சிறுமியை பீரோவில் அடைத்த அங்கன்வாடி ஊழியர்- பொதுமக்கள் போராட்டம்
ஹைதராபாத்: அழுது அடம் பிடித்ததால் 3 வயது சிறுமியை அங்கன்வாடி ஊழியர் ஒருவர் பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் ராமாயம்பேட்டா மண்டலம் வெங்கடாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அணில். இவரது மனைவி சத்யம்மாள். இத்தம்பதியின் மூன்று வயது மகள் துர்காபவானி.
அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி ஒன்றில் நேற்று துர்காபவானியைச் சேர்த்துள்ளனர் அவரது பெற்றோர். பெற்றோரை விட்டுப் பிரிந்ததால் அங்கன்வாடி ஊழியர்கள் சமாதானம் செய்தும், தொடர்ந்து அச்சிறுமி அழுது கொண்டே இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர் யசோதா என்பவர் சிறுமியை மிரட்டும் வகையில் அருகிலிருந்த இருட்டு அறையில் இருந்த பீரோவில் துர்காவை அடைத்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சிறுமி சிகிச்சைக்காக அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே தகவலறிந்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராமத்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுமி என்றும் பாராமல் இரக்கமின்றி நடந்து கொண்ட அங்கன்வாடி ஊழியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாய் - சேய் நலத்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியும் அளித்தனர்.
சிறுமி பீரோவில் அடைக்கப்பட்ட சம்வம் தொடர்பாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications