தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- சீமாந்திராவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்! வெறிச்சோடின நகரங்கள்!
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தால் ஆந்திர மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பல நகரங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
தனித்தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதற்கு ஆந்திராவின் 13 மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் திருப்பதி, சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பல இடங்களில் வாகனங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். விஜயநகரத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் சத்யநாராயணாவுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஆர்ப்பட்டக்காரர்கள் சூறையாடினர்.
மசூலிப்பட்டினத்தில் முட்டிபோட்டுட்டு போராடிய தெலுங்கு தேசம் கட்சியினருக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. தெனாலியில் சபாநாயகர் மனோகர் வீட்டையும் குண்டூரில் மாநில அமைச்சர் கன்னா லட்சுமி நாராயணா வீட்டையும் முற்றுகையிட முயன்றதை போலீசார் தடுத்தனர்.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே சில எம்பிக்களும் அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications