சிதம்பரம், சிவக்குமார் அடுத்து ரேணுகா சவுத்ரி- ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்
கம்மம்: முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரிக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள், வாரிசுகள் மீதான பழைய வழக்குகள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் சகோதரி மகன், வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கானா கம்மம் மாவட்டத்தில் மோசடி வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரேணுகா சவுத்ரிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
2014 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ரூ1.20 கோடி மோசடி செய்தார் ரேணுகா சவுத்ரி என்பது வழக்கு. ரேணுகா சவுத்ரி மீது புகார் தெரிவித்திருந்த ராம்ஜி நாயக், மன அழுத்தங்களால் 2014-ல் மரணமடைந்தார். இது தொடர்பான வழக்கில் ரேணுகா சவுத்ரி கம்மன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications