தெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலமாக உதயமான நாள். தெலுங்கானா உருவான நாளை முன்னிட்டு முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அழைக்கப்படாதது விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஆந்திரா எனும் மிகப் பெரிய மாநிலம் 2014-ம் ஆண்டு 2 ஆகப் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை நீண்டகாலமாக நீடித்து வந்தது. 1969-ம் ஆண்டு முதல் தெலுங்கானா தனி மாநிலம் கோரி ஏராளமான உயிர் தியாகங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2-ந் தேதி தெலுங்கானா மாநிலம் உருவான நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானா தனி மாநிலம் உருவான நாளை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது வாழ்த்து செய்தியில், தெலங்கானா உருவான நாளில் அம்மாநில சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். வளமான கலாசாரம், பாரம்பரியம் மற்றும் உழைக்கும் மக்களைக் கொண்ட தெலங்கானா நம் தேசத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. தெலங்கானா செழித்து, முன்னேறி அமைதியின் புதிய உச்சங்களை அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தெலுங்கானா உருவான நாளிலும் முதல்வர்- மாநில ஆளுநர் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. தெலுங்கானா நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அழைப்பு விடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகை நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.













Click it and Unblock the Notifications