தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக 21 மாவட்டம் உதயம்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மக்கள் ஆளுமையை அதிகரிக்கவும் நலத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தவும் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தி புதிதாக 21 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கான மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகரா ராவ் உள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்து தெலுங்கானா 29 வது மாநிலமாக கடந்த 2014 ஆம் ஆண்டு உதயமானது. அப்போது ஆந்திராவுக்கு 23 மாவட்டங்களும், தெலுங்கானாவுக்கு 10 மாவட்டங்களும் ஒதுக்கப்பட்டது. தெலுங்கானாவில் ஹைதராபாத், ரெங்காரெட்டி, அதிலாபாத், கரீம்நகர், நிஜாமாபாத், வரங்கல், நல்கொண்டா, கம்மம், மெகபூப்நகர், மேதக் ஆகிய 10 மாவட்டங்கள் இருந்தன.

மக்கள் ஆளுமையை அதிகரிக்கவும் நலத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தவும் மாவட்டங்களின் எண்ணிக்கைகளை உயர்த்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். இதையடுத்து 10 மாவட்டங்களில் இருந்து புதிதாக 21 மாவட்டங்கள் பிரித்து அறிவிக்கப்பட்டது. மஞ்சிர்யலா, நிர்மல், கோமூர்பீம் அஷிஷாபாத், ஜகித்யலா, பெத்தபள்ளி, ராஜன்னாசிரிசில்லா, காமாரெட்டி, வரங்கல் அர்பன், வரங்கல் ரூரல், ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி, ஜனகாம், மெகபூபாபாத், சூரியபேட்டை, மாதாத்ரி, விக்கராபாத், மெகுசல், பத்ரதரி கொத்தகூடம், சங்காரெட்டி , சித்திபேட்டை வனபர்த்தி, நாககர்னூல், ஜோகுலம்மாள் கத்யாலா, ஆகிய மாவட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதசமியான இன்று புதிய 21 மாவட்டங்கள் உதயமாகிறது. இதற்கான விழா ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெரு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சித்திப்பேட்டையில் நடக்கும் விழாவில் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் கலந்து கொள்கிறார். இந்த புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், டி.எஸ்.பிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications