வாக்குச்சாவடியை மட்டும் தான் விட்டு வச்சிருந்தீங்க.. இப்போ அங்கேயுமா?
தெலுங்கானாவில் வாக்குச்சாவடியில் செல்பி எடுத்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
சென்னை: தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு சாவடிக்குள் செல்பி எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏராளமான வாக்கவாளர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
ராஜேந்திரா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சாவடிக்குள் சென்று, தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அதே இடத்தில் தனது செல்போனில் செல்பி எடுத்தார். அதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்தனர். இருப்பினும் அவர் செல்பி எடுத்தார்.
இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரின் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் செல்பி எடுத்த அந்த நபரின் பெயர் சிவ்குமார் என்பது தெரியவந்தது. அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 188ம் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா காவல் துறை அதிகாரி பிரகாஷ் ரெட்டி, "வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிவ்குமார் இந்த தடையை மீறி செல்பி எடுத்ததால், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்", எனக் கூறினார்.
ஸ்மார்ட் போன் வந்த பிறகு இளைஞர்களிடையே செல்பி மோகம் அதிகரித்துள்ளது. எங்கும் எப்போதும் செல்போனில் செல்பி எடுத்தபடியே திரியும் இளைஞர்கள், ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கலில் மாட்டிக்கொள்வது அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் செல்பி மோகத்தால் உயிர் பலி ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.