தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை சிஏஜி ஆய்வு செய்யலாம்: டெல்லி கோர்ட் அதிரடி தீர்ப்பு!!
டெல்லி: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை மத்திய தலைமை கணக்காயம் (சிஏஜி) ஆய்வு செய்யலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் அந்த அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் கணக்கு விவரங்களை கடந்த 2010 ஆம் ஆண்டு சிஏஜி கேட்டது. ஆனால் அதனை கொடுக்க மறுத்த அந்த நிறுவனங்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடின.
ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் சிஏஜி ஆய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தை அந்த நிறுவனங்கள் நாடிய நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்திடமே இந்த வழக்கை மீண்டும் திருப்பிவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, தாங்கள் தனியார் நிறுவனங்கள் என்றும், எனவே சிஏஜி தங்களது வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய உரிமை இல்லை என்றும் அந்நிறுவனங்கள் வாதிட்டன.
அந்த வாதத்தை ஏற்க மறுத்து நேற்று தீர்ப்பளித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். அலைக்கற்றை ஒதுக்கீட்டை வருவாய் அடிப்படையில் அரசுடன் பகிர்ந்துகொள்ள தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாலும், வருவாயை குறைத்துக் காண்பிக்க வாய்ப்புள்ளதாலும், அவற்றின் பண பரிவர்த்தனை தொடர்பான வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய சிஏஜி-க்கு உரிமை உண்டு என தனது தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications