20 வயது ஆசிரியையை கடத்தி, மதமாற்றம் செய்து பலாத்காரம் செய்த கும்பல்.. உ.பியில் பதட்டம்
மீரட்: உ.பியில் தொடர்ந்து பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் கொதிப்படைந்து வருகின்றனர். மீரட் நகரில் 20 வயது ஆசிரியை ஒருவர், கடத்திச் செல்லப்பட்டு பலரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டின் கர்கடா பகுதியைச் சேர்ந்தவர் இந்த ஆசிரியை. இவரை கடத்தியவர்கள் கட்டாய மதமாற்றத்தையும் செய்ததாகவம் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து மீரட் மற்றும் அண்டை மாவட்டங்களில் போலீஸார் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போலீஸார் பெருமளவில் பதட்டமான பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மதரசா அமைந்துள்ள சர்வா கிராமத்தில், போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியையை 3 நாட்கள் முசாபர்நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அக்கிரமம் செய்துள்ளது அந்தக் கும்பல். கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தப்பி வந்த அந்த ஆசிரியை தனது வீ்ட்டை அடைந்து நடந்த அக்கிரமத்தை விவரித்தார். தன்னை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது.
முன்னதாக இந்தப் பெண்ணை மதரசாவைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதசரா நிர்வாகி ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிராமத் தலைவர் நவாப் கான் மற்றும் மதரசா அதிகாரி சன்னாவுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. அதில் 2 பேர் கைதாகி விட்டனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர்.
சம்பந்தப்பட்ட மதரசாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியையாக இவர் இருந்து வந்தார். நடந்தது குறித்து அவர் கூறுகையில், கிராமத் தலைவர் மற்றும் சன்னாவுல்லா, இன்னும் சிலர் தன்னை ஹபூர் மாவட்டத்தில் உள்ள மதராசவுக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து தன்னை மதமாற்றம் செய்தனர். பின்னர் பெயரையும் மாற்றினர். அதன பின்னர் முசாபர்நகருக்குக் கொண்டு சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று கூறியுள்ளார்.
கடத்தல், கட்டாய மதமாற்றம், பாலியல் பலாத்காரம் ஆகியவை காரணமாக மீரட், ஹபூர் பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.