டெல்லி மெட்ரோ ரயிலைத் தாக்கித் தகர்க்க திட்டம்... 2 தீவிரவாதிகள் கைது
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயிலில் தினசரி சராசரியாக 25 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். எனவே தீவிரவாதிகள் இங்கு தாக்குதல் நடத்தினால் பெரிய உயிர் சேதம் ஏற்படும் என்பதால், மெட்ரோ ரயில் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கண் வைத்துள்ளதாக கடந்த வாரம்தான் நாடாளுமன்ற குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில், உ.பி.யை சேர்ந்த அப்துல் ரகுமான், ஆசீப் ஆகிய இரு தீவிரவாதிகளை, டெல்லி போலீசார், கட்டாக் காவல்துறை உதவியோடு கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு சென்று, தீவிரவாத பயிற்சி பெற்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதோடு, டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களை தகர்க்கும் திட்டத்தோடு இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இவ்விருவரின் கைதால், பெரிய தாக்குதல் அபாயத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் தப்பியுள்ளன. இருப்பினும், எதிர்கால பாதுகாப்பை கருத்தில்கொண்டு, மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கைதான இவரும், அல்கொய்தா மற்றும லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில், சிசிடிவி காமிராக்களை அதிகரிப்பதுடன், ரிசர்வ் போலீசார் துணையோடு பாதுகாப்பு பணிகள் நடைபெறுகின்றன. அதிரடி படையினரை மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.