ஜம்மு காஷ்மீரில் ஷாக்.. ராணுவத்தினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 4 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேடி பகுதியில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், "மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். ராணுவ வீரர்களின் வாகனங்களை நோக்கி சுட தொடங்கியுள்ளனர். பின்னர் கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர்.

திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர்கள் பதில் தாக்குதலை தொடுத்தனர். இரு தரப்பிலும் கடும் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. இதில் ராணும் தரப்பில் 4 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதேபோல 6 விரர்கள் படுகாயமடைந்துள்ளனர். கூடுதல் ராணுவ வீரர்கள் பேக்-அப்-க்கு வந்த நிலையில், தீவிரவாதிகள் காட்டில் ஓடி ஒளிந்தனர். இருப்பினும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இரு தரப்பிலும் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜோரி பகுதியில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் பதில் தாக்குதலை தொடுத்தனர். இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் முழுமையாக குறைந்துவிட்டது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்ற ஜூன் 9ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதில் 9 பேர் வரை உயிரிழந்தனர். இதற்கடுத்து ஜூன் 11,12ம் தேதியும் காஷ்மீரில் தொடர் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன. இப்படியான அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவது என்பது மத்திய அரசுக்கு சவாலானதாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications