27 பேரை படுகொலை செய்த பயங்கரவாதிகள்- மோடி கண்டனம்- ஶ்ரீநகரில் அமித்ஷா- உதவி எண்கள் அறிவிப்பு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஜம்மு காஷ்மீர் விரைந்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடம் பஹல்காம் பள்ளத்தாக்கு.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் இந்த வெறியாட்டத்தில் 27 அப்பாவிகள் பலியாகினர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட இக்கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி, உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் விரைந்துள்ளார். ஶ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு மற்றும் பாதுகாப்பு படையினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதனால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
#WATCH | Srinagar | Union Home Minister Amit Shah chairs a high-level security meeting with all the agencies following the Pahalgam terror attack. pic.twitter.com/rCSy0tuW2B
— ANI (@ANI) April 22, 2025
பிரதமர் மோடியின் கண்டனம்
ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்... அவர்கள் தப்ப முடியாது! அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாத தாக்குதலால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்க் மாவட்ட நிர்வாகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. 24 மணிநேரமும் செயல்படக் கூடிய அவசர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள்:
9596777669
01932225870
Whatsapp 9419051940
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதிக்கு விரைந்துள்ளார்.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications