ஸ்ரீநகர் தாக்குதல்... 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஒரு சிஆர்பிஎப் வீரர் மரணம்.. மோதல் தொடர்கிறது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சுதந்திர தினமான இன்று காலை திடீரென தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாதிகள் தரப்பில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒரு தீவிரவாதியுடன் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுட்டுள்ளனர். சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது.
ஸ்ரீநகரின் நவஹட்டா என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. அந்தப் பகுதி தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்யார் என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. அந்த இடத்தைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதுவரை 2 சிஆர்பிஎப் வீரர்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தீவிரவாதிகள் தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். நமது தரப்பில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணமடைந்தார். ஒரு தீவிரவாதி மட்டும் தற்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளான். துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் தீவிரவாதிகள் ஸ்ரீகநரில் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடந்துள்ள நவஹட்டா பகுதிக்கு வெகு அருகில் உள்ள பக்சி ஸ்டேடியத்தில்தான் முதல்வர் மெஹபூபா முப்தி பங்கேற்கும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகரில் ஜூலை 8ம் தேதி 22 வயதான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்திற்குப் பின்னர் நடந்த மோதல்களில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications