பயங்கரவாதிகளை கொல்லக் கூடாது.. வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா.. கிளம்பியது சர்ச்சை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய பரூக் அப்துல்லா, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை கொலை செய்யக்கூடாது எனவும் அவர்களை உயிருடன் பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. நேற்று உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உமர் அப்துல்லா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் மூளையாக செயல்படுவர்களை கண்டறிய, பயங்கரவாதிகளை கொல்லாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.
பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பரூக் அப்துல்லா இது தொடர்பாக அளித்த பேட்டியில், "பயங்கரவாதிகளை விசாரிப்பதன் மூலம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் பற்றிய தகவல்களை பெற முடியும். ஜம்மு காஷ்மீரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடக்கிறதா? என சந்தேகம் உள்ளது.
இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டால் விசாரணை நடத்துவோம். எனவே பயங்கரவாதிகள் கொல்லப்படக்கூடாது. அவர்களை உயிருடன் பிடித்து அவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும். உமர் அப்துல்லா அரசை சீர்குலைக்க முயற்சிக்கும் ஏஜென்சி இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்" என்றார்.
பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் பாஜக, "இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வருகை தருகிறார்கள் என்பது பரூக் அப்துல்லாவுக்கு தெரியும். இது நன்கு அறியப்பட்ட ஒரு உண்மை.
இதில் விசாரணை நடத்துவதற்கு என்ன இருக்கிறது? ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது என்பது பரூக் அப்துல்லாவுக்கு தெரியும். நாம் அனைவரும் நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்க வெண்டும். மனித குலத்திற்கு எதிரான எதிரிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications