வங்கிக் கடன்களை வருமானமாக கருதாத கீழ் நீதிமன்றம்..ஜெ. விடுதலைக்கு நீதிபதி குமாரசாமி சொல்லும் காரணம்!
பெங்களூர்: தமிழக முன்னாள் ஜெயலலிதா உள்ளிட்டோர் வாங்கிய வங்கிகளில் வங்கிக் கடன்களை ஒரு வருமானமாகவே கருதாமல் கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறானது என்று கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் காட்டமாக பதிவு செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிநீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு கீழ்நீதிமன்றம் தண்டனை விதித்து அளித்த தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்தார். நீதிபதி குமாரசாமி தமது 919 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

அரசுத் தரப்புதான் திருப்திபடுத்தவேண்டும்
மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு தரப்பின் வாதம் உண்மையானது என்றும் மேல்முறையீட்டு மனுதாரர்களின் குற்ற நிரூபணம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை நீதிமன்றங்களைப் போலவே மேல்முறையீட்டு நீதிமன்றத்தையும் திருப்திப்படுத்த வேண்டும். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் இந்த நீதிமன்றத்தை திருப்திப்படுத்த வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வேலை. அந்த வகையில் விசாரணை நீதிமன்றத்துக்கு உள்ள அதே அதிகாரங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் உள்ளன.

வருமான வரி மதீப்பீடு
இதன்படி ஆதாரங்களை ஆராய்ந்தால், விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகள் தவறானவை; ஆதாரங்களுக்கு முரணானவை. இந்த வழக்கில் வருமான வரித்துறையின் மதிப்பீட்டை விசாரணை நீதிமன்றம் பெரிய ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவில்லை.

வங்கிக் கடன்களை கண்டுக்கலையே
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியன் வங்கியில் கடன் பெற்றதை விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த கடனை ஒரு வருமானமாக கருதவில்லை. இதன்மூலம் கடனை வருமானமாக கருதாத தவறை விசாரணை நீதிமன்றம் செய்துள்ளது.

திருமண செலவுக்கு ஆதாரம் ஏது?
கட்டுமான செலவு தொடர்பான ஆதாரங்களை முறையாக ஆராய தவறி விட்டது. கட்டுமான செலவாக 20% செலவை கழித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக முடிவு செய்து விட்டது. இந்த 20% கழிவு என்பது சந்தேகத்துக்கு உரிய வகையிலும் யூகத்தின் பேரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.
சுதாகரன் திருமண செலவை ரூ.3 கோடி என்று விசாரணை நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது. அந்த ரூ.3 கோடியை முக்கிய குற்றவாளி ஜெயலலிதா செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அதையும் மீறி திருமண செலவு ரூ.3 கோடி என்ற முடிவுக்கு வந்துள்ளது.
திருமண செலவு ரூ.3 கோடி என்றும், அந்த தொகையை முக்கிய குற்றவாளியின் செலவு கணக்கில் சேர்த்ததும் முறையல்ல.

சாட்சிகளின் நம்பகத் தன்மை
குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்வைத்த பெரும்பாலான வாதங்களை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக கருதாமல் அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்கு சாதகமான முறையில் அரசுத்தரப்பு கேள்விகள் கேட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக இதை கருத வேண்டும். சாட்சிகள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.

பறிமுதல் செய்ய உத்தரவிட்டது தவறு
முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் சொத்துகள் வாங்கப்பட்டதாக யூகிப்பது கடினம். எனவே அந்த சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.
ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் விசாரணை நீதிமன்றம் ஆராயவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கித்தான் அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

கூட்டுச் சதியா?
4 குற்றவாளிகளும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முக்கிய குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.
ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான் அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேரும் பெருமளவு கடன் வாங்கி, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.
எனவே, வருமானம் வந்த வழி சட்டப்பூர்வமானது. நோக்கம் சட்டப்பூர்வமானது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக 4 பேரும் சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது.

மிகை மதிப்பீடு
ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும்போது விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது. சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது. கட்டுமான செலவாக ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 945-ஐயும், திருமண செலவாக ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 என்று மதிப்பிட்டுள்ளது.

இதுதான் வருமானத்துக்கு அதிகமான சொத்து
மிகைப்படுத்தப்பட்ட கட்டுமான செலவையும், திருமண செலவையும் கழித்து விட்டோம் என்றால் மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆகும்.
ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்பு குறைவாகவே இருப்பதால் அந்த செலவை நான் கழிக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ஆகும். சொத்து மதிப்பில் இருந்து மொத்த வருமானத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இதுவே வருமானத்துக்கு மீறிய சொத்து ஆகும்.

8.12%தான் கூடுதல் சொத்து..
அதாவது இந்த தொகை மொத்த வருமானத்தில் 8.12% ஆகும். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்பவரின் வழக்கில் சொத்து குவிப்பு வருமானத்தை விட 10% வரை இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சொத்து குவிப்பு வருமானத்தை விட 20% வரை இருந்தால் அதை அனுமதிக்கத்தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திரா அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு 10 முதல் 20% வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத்தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12% மட்டுமே இருப்பதால் அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.

அனைவரும் விடுதலை
முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.
ஆகவே அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், சிறை தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது. அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications