'டெய்லி' சிறைக்கு வரும் அதிமுகவினர்.. நேற்று தம்பித்துரை, சசிகலா புஷ்பா வாசலில் உட்கார்ந்து ஆலோசனை!
பெங்களூர்: பெங்களூர் சிறைக்குள் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்க்க யாரையும் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்ற போதிலும் தினசரி சிறைக்கு வருவதை அதிமுகவினர் வழக்கமாக வைத்துள்ளனர். நாமும் வந்தோம் என்று கணக்கு காட்டுவதற்கா அல்லது உண்மையான அக்கறையுடன் வருகிறார்களா என்று தெரியவில்லை.
நேற்றும் கூட நாடாளுமன்ற லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, எம்.பிக்கள் சசிகலா புஷ்பா, மனோஜ் பாண்டியன், நவநீத கிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் விஜய பாஸ்கர், பழனியப்பன், சம்பத், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் வந்திருந்தனர்.
ஆனால் யாரையும் சிறைக்குள் அனுமதிக்கவில்லை அதிகாரிகள்.

வாசலில் உட்கார்ந்து ஆலோசனை
இதனால் தம்பித்துரை உள்ளிட்டோர் சிறை நுழைவாயில் பகுதியில் உள்ள வாசலிலேயே உட்கார்ந்து முக்கிய ஆலோசனை நடத்துவது போல மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

திரண்டு வரும் தொண்டர்கள்
தொடர்ந்து சிறைக்கு தொண்டர்களும், அதிமுக பிரமுகர்களும் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் அனைவருமே வாசல் வரைதான் வர முடிகிறது.

தேங்காய் உடைப்பு
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மூடை நிறைய தேங்காய்களைக் கொண்டு வந்த சிறை முன்பு டமால் டமால் என உடைக்க ஆரம்பித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 101 தேங்காய்களை அவர்கள் உடைத்தனர்.

இப்படியெல்லாம் பண்ணப்படாது...!
இதைப் பார்த்த கர்நாடக போலீஸார், இப்படியெல்லாம் பொது இடத்தில் தேங்காய் உடைக்கக் கூடாது. கிளம்பிப் போங்க என்று கூறினர். இருந்தாலும் 101 தேங்காய்களையும் உடைத்த பிறகுதான் அந்த இடத்தை விட்டு கிளம்பினர் அதிமுகவினர்.

சிங்கிளாக உண்ணாவிரதம் இருக்கும் சென்னை சிங்கம்...!
இதற்கிடையே சிறைப் பகுதியில் சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தனி நபரா சிறைக்கு முன்பாக 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

முதல் மாடிக்கு மாற்றமா...!
இதற்கிடையே, ஜெயலலிதாவை முதல் மாடிக்கு மாற்றியுள்ளதாக வந்துள்ள செய்திகளை சிறை டிஐஜி ஜெயசிம்மா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அறையில் தான் இருக்கிறார். அவர் முதல் மாடிக்கு மாற்றப்பட்டதாக வெளியான தகவல் முழுவதும் பொய். இத்தகைய தவறான தகவல்களை தயவுசெய்து யாரும் வெளியிட வேண்டாம். பெரும்பாலும் ஜெயலலிதா தனது அறையை விட்டு வெளியே வருவது இல்லை. அவருடன் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரும் உள்ளனர்.

கோர்ட் முடிவெடுக்கலாம்
ஜெயலலிதாவை தமிழ்நாட்டில் உள்ள சிறைக்கு மாற்றுவது குறித்து கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications